புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு


அரங்கம்

மைசூரில் இயங்கி வரும் மத்திய செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் சார்பில் நானும் திரு. அகிலன் அவர்களும் புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்குக்கு சென்றோம்.
அங்கு நடைப்பெற்ற நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு திசம்பர் 9(09.12.2007) ஞாயிறு காலை 09. 00 மணி முதல் இரவு 08.30 மணிவரை புதுச்சேரி சற்குரு உணவகத்தின் கருத்தரங்க அறையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழா திரு. முகுந்த்

காலை 9-00 மணிக்குப் பங்கேற்பாளர்களின் பதிவு தொடங்கியது. 9-30 மணிக்கு நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தைக் கோ.சுகுமாரன் அவர்கள் வழங்கினார் அவரைத்தொடர்ந்து தமிழா முகுந்த் அவர்கள் தமிழ் எழுத்துருக்களின் செயலிகளை எவ்வாறு நிறுவுவது எனச்செயல் விளக்கம் அளித்தார். இடையிடையே சென்னை நண்பர்களும் முகுந்துடன் இணைந்து கொண்டனர். இரா.சுகுமாரன் இளங்கோ செயலி நிறுவுவதை விளக்கினார்.


காலை 10.00 முதல் 10.30 வரை முனைவர் மு.இளங்கோவன் தமிழ் 99 தட்டச்சுப் பலகையின் வருகை, பயன்பாடு,நிறை,குறைகளைப் பகிர்ந்து கொண்டார். மா.சிவகுமார் இடையில் வந்து அவையின் இறுக்கத்தைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார்.பங்கேற்பாளர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

10.30 முதல்11.00 மணி வரை க.அருணபாரதி கணினியில் தமிழ்ப்பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.இதில் மின்னஞ்சல் வசதி,அரட்டை பற்றி விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு நடைபெற்ற பயிலரங்க நிகழ்வுகளை ஓசை செல்லா,வினையூக்கி,சிவகுமார் முதலானவர்கள் தமிழ்வெளி,தமிழ்மணம் முதலான தளங்கள் வழியாகப் படத்துடன் நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.

தேநீர் இடைவேளைக்குப்பிறகு உபுண்டு இராமதாசு அவர்கள் தமிழில் உள்ள இயங்குதளங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.12.00 -12.30 வரை முகுந்த் இணைய உலவிகளான பயர்பாக்சு பற்றிப்பேசினார்.

12.30 -1.00 மணிவரை முனைவர் மு.இளங்கோவன் தமிழில் உள்ள தரவுதளங்கள், இணையதளங்கள், இணைய இதழ்கள்,வலைப்பூக்கள் பற்றி விரிவாகப்பேசினார்.
விக்கிபீடியா,விருபா,நூலகம்,சென்னை நூலகம்,மதுரைத் திட்டம்,திண்ணை,பதிவுகள் பற்றி விரிவாகப் பேசி சிறப்புமலரில் உள்ள தம் கட்டுரையில் தமிழில் உள்ள தளங்களைப் பற்றிய பட்டியல் உள்ளதை அவைக்கு நினைவூட்டினார்.

பகலுணவுக்குப்பிறகு 2.00-முதல் 3.00 மணிவரை முனைவர் நா.இளங்கோ அவர்கள் வலைப்பதிவு அறிமுகம் என்னும் பொருளில் பல்வேறு செய்திகைப் பகிர்ந்துகொண்டார்.அவர் உரைக்குப்பிறகு அரங்கில் பொருத்தப்பட்டிருந்த கணிப்பொறிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பலர் மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக் கொண்டனர். பலர் வலைப்பூ உருவாக்கிக்கொண்டனர்.மா.சிவகுமார்,வினையூக்கி,வெங்கடேஷ் முதலான தோழர்கள் இதில் பெரும்பங்காற்றினர்.

பிற்பகல் 3.00 மணிக்கு வலைப்பூவில் படம் இணைப்பது,ஓசை இணைப்பது பற்றி பிரேம்குமார்,ஓசை செல்லா பயிற்சியளித்தனர்.இடையிடையே வேறு நண்பர்களும் இணைந்துகொண்டனர்.பயிற்சிக்கு வந்திருந்த முத்துராசுவின் கவிதை வாசிப்பைப்பதிவு செய்து ஓசை செல்லா அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இரா.சுகுமாரன் திரட்டிகளில் இணைப்பது உட்பட பல தகவல்களை அவ்வப்பொழுது வழங்கினார்.மா.சிவகுமார் திரட்டிகளில் இணைப்பது பற்றி இடையிடையே விளக்கினார்.

தூரிகா வெங்கடேஷ் கூட்டு வலைப்பதிவு உட்பட பல தகவல்களைப்பகிர்ந்துகொண்டார்.

இணைய இதழ்களில் எழுதுவது பற்றி முனைவர் மு.இளங்கோவன் விளக்கினார். திண்ணை, பதிவுகள்,சிபி,வணக்கம் மலேசியா முதலான இதழ்களில் எழுதுவது பற்றி விளக்கினார்.இவ்வாறு பயிலரங்கு நிறைவுநிலைக்கு வந்தது.

பயிற்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. பலரும் தங்களின் நிறைவான கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மாலை 6.30 மணியளவில் நிறைவுவிழா தொடங்கியது.

பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை தாங்கினார். கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார்.க.அருணபாரதி வரவேற்புரையாற்றினார்.பேராசிரியர் நா.இளங்கோ தொடக்கவுரையாற்றினார். பேராசிரியர் மு.இளங்கோவன் நோக்கவுரை யாற்றினார். பராதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் கருத்துரை வழங்கினார்.கணிப்பொறி,இணையவரலாறு,தமிழ் இணையத்தில் இடம்பெற்றமை,தமிழ் ஒருங்குகுறி குறித்துள்ள சிக்கல்கள்,முழுமையான ஒருங்குகுறி இடம்பெற உள்ள நிலை இவற்றை நிரல்பட விளக்கினார்.தமிழ்மொழி அனைத்து நிலைகளிலும் இடம்பெறவேண்டியதன் தேவை பற்றி எடுத்துரைத்தார்.
பயிற்சிப்பட்டறை என்பதைவிட பயிற்சிப் பயிலரங்கு என்றிருப்பதன் பொருத்தப்பாட்டை விளக்கினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் நிறைவுரை யாற்றினார். தமிழ்வளர்ச்சிக்குப் புதுவை அரசு தொடர்ந்து பாடுபடும் எனவும்,கணிப்பொறியில் தமிழ் இடம்பெறுவதற்கு இயன்ற உதவிகளைச்செய்ய அணியமாக இருப்பதாகவும் உறுதியளித்தார். பயிலரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

தூரிகா வெங்கடேஷின் நன்றியுரையுடனும் நாட்டுப்பண்ணுடனும் இரவு 8.30 மணிக்கு விழா இனிதே நிறைவடைந்தது.